Tuesday, May 08, 2012

thumbnail

கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கினார்: காதல் தோல்வியால் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை?

விழுப்புரம் மாவட்டம் நாச்சியார்குப்பம் சித்தார்த்தர் பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மகள் மகாதேவி(வயது18) வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ., முதலாமாண்டு எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார்.
 
இந்த நிலையில் நேற்று காலை வகுப்பு முடிந்து மதிய உணவு சாப்பிட்ட பிறகு ஆய்வகத்துக்கு தோழிகளுடன் மகாதேவி சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு புத்தகத்தை மறந்து வைத்து விட்டேன் எடுத்து விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு விடுதிக்கு சென்றார்.
 
பின்னர் மகாதேவி வகுப்புக்கு வரவில்லை. இதனால் சக மாணவிகள் மாலை 3.30 மணிக்கு விடுதிக்கு சென்று பார்த்த போது அங்கு மின்விசிறியில் மகாதேவி தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். உடனே அவரை மீட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
 
இதுகுறித்து கல்லூரி முதல்வர் அருளரசு பாகாயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
காதல் தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளனர். மாணவியின் பெற்றோர், தோழிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About