Friday, May 18, 2012

thumbnail

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு, ஸ்பின்னிங் மில்லில் திடீர் ரெய்டு

திண்டுக்கல் :முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு, ஸ்பின்னிங் மில்லில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அவரது மகன், மகள் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. கடந்த ஓராண்டாக திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னணி தலைவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவ்வப்போது சோதனை நடத்துகின்றனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் நேற்று சோதனை நடந்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மாவட்ட திமுக செயலாளருமான ஐ.பெரியசாமி எம்எல்ஏ வீட்டில் இன்று ரெய்டு நடந்தது. ஐ.பெரியசாமியின் வீடு திண்டுக்கல் மேற்கு கோகிலாபுரத்தில் உள்ளது. லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். வெளி நபர்கள் யாரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தில் உள்ள ஐ.பெரியசாமியின் மகனும் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளருமான செந்தில்குமார் வீடு,

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் வசித்து வரும் பெரியசாமியின் மகள் இந்திராவின் வீடு மற்றும் வத்தலகுண்டு அருகே முத்துப்பட்டியில் உள்ள ஐ.பெரியசாமியின் ஸ்பின்னிங் மில் ஆகிய 4 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்து வருகிறது. சோதனையின்போது ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா ஆகியோர் வீட்டில் இருந்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு, ஊழல் ஆகிய புகார்கள் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். சோதனை குறித்த தகவல் பரவியதும் திமுக வக்கீல்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் ஐ.பெரியசாமி வீட்டு முன்பு திரண்டுள்ளனர். இதனால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போதும் ஐ.பெரியசாமியின் வீடு, மில் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. திண்டுக்கல் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் ஐ.பெரியசாமி விடுதலை செய்யப்பட்டார். தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About