Sunday, May 13, 2012

thumbnail

அம்பேத்கர் கேலி சித்திரம்: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்



.தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தை யாத்துத் தந்த அறிவார்ந்த பெருமக்களில் தலையாய இடம்பெற்ற டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமைந்த கேலிச் சித்திரம் இந்திய அரசின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுப் பாடத்திட்டத்தின்படி வெளியிடப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசியல் அறிவியல் பாடநூலில் அச்சிடப்பட்டு, பாட சாலைகளுக்கெல்லாம் வினியோகிக்கப்பட்டது மன்னிக்க இயலாத கண்டனத்திற்குரியதாகும்.
வரலாற்றின் உண்மைகளை மாணவர்களுக்கு உணர்த்துவதற்கும், கற்பிப்பதற்கும்தான் பாடப்புத்தகம் பயன்பட வேண்டும். ஆனால், இந்தப் பிரச்சினையில் உண்மைக்கு நேர்மாறான தவறான தகவலை டாக்டர் அம்பேத்கர் குறித்த கருத்துப் படம் தருகிறது. அரசியல் சட்ட வரைவுச் சட்டத்தை யாத்துத் தருகின்ற பொறுப்பையும் பெருமளவில் அம்பேத்கர் மேற் கொண்டார்.
அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26-ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தப் பணி இமயமலையை நகர்த்தி வைக்கின்ற கற்பனைக்கு எட்டாத மிகப்பெரிய சாதனைப் பணியாகும். இந்த சபையில் அனைவருமே அர்ப்பணிப்போடு உழைத்திருக்கின்றார்கள். மத்திய அரசும், மாநில அரசுகளும் அவ்வப்பொழுது பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள அறிவிக்கின்ற விசாரணை கமிஷன்கள் பல வருடங்களுக்கு அறிக்கை தராமல் இருக்கின்ற இன்றைய அவல நிலையைப் போலத்தான், அரசியல் நிர்ணய சபையும் காலத்தை வீணாக விரயம் செய்தது என்ற மிகத் தவறான கருத்தை குறிப்பிட்ட கேலிச்சித்திரம் ஏற்படுத்துகிறது என்பதையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய நாடாளுமன்றத்தின் 60-வது ஆண்டு விழா நடைபெறும் வேளையில், அம்பேத்கருக்கு நன்றி பாராட்டி புகழ் மகுடம் சூட்ட வேண்டிய மத்திய அரசு, அம்மாமனிதரைக் குறித்த கேலிச் சித்திரம் பாடப் புத்தகத்தில் இடம் பெறுகிற நிலை ஏற்பட்டதற்கு, அந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்த உடனே, உடனடியாகப் பாடப்புத்தகங்களைத் திரும்பப் பெறச் செய்யும் கடமையில் தவறியது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலத்த கண்டனத்தை எழுப்பிய பின்னரே பிரச்சினை எரிமலையாய் வெடிக்கக் கூடும் என்று பயந்து ஒப்புக்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறது. குறிப்பிட்ட கேலிச்சித்திரம் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் அனைத்தையும் திரும்ப பெறும்போதே, திருத்தம் செய்யப்பட்ட புத்தகங் களை அப்பொழுதே மாணவர் களுக்கு வழங்கிட வேண்டும். மத்திய அரசு இதில் முழு வேகத்தோடு உடனடியாக செயல்பட வேண்டும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About