Monday, May 14, 2012

thumbnail

பொதுமக்களின் உயிரை பறிக்கும் ‘பைக்ரேஸ்’: 12 வயது சிறுமி பலியானதால் வாலிபருக்கு அடி-உதை

சென்னை போலீசுக்கு பெரும் சவாலாகவும், பொதுமக்களுக்கு கடும் அச்சுறுத்தலாகவும் உள்ளது சட்டவிரோதமாக நடத்தப்படும் பைக்ரேஸ்.

பரபரப்பான சாலைகளில் சிக்னலில்கூட நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று குறிப்பிட்ட இலக்கை அடையவேண்டும். இதுதான் பைக்ரேஸ் வாலிபர்கள் தங்களுக்குள் வகுத்து வைத்துள்ள போட்டி விதியாகும்.

இதன்படி 4 அல்லது 5 குழுக்களாக பைக்ரேசில் ஈடுபடும் வாலிபர்கள், எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. சாலையில் நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் யாராக இருந்தாலும், பைக் ரேசின் பிடியில் சிக்கினால் மரணம் நிச்சயம். 100 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் ரேஸ் பைக் மோதினால் என்னாகும்? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

இப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ‘சினிமாவில் வருவதுபோல முதியவர் சைக்கிளுடன் பலஅடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். நேற்று இரவு கிண்டி கவர்னர் மாளிகை அருகே ரேஸ் பைக் மோதி 12 வயது சிறுமி சைலஜா பலியானாள்.

வேளச்சேரியை சேர்ந்த இவள் தந்தை அரிகரனுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர், மின்னல் வேகத்தில் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், சைலஜா, ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டாள்.

அப்போது அந்த வழியாக வந்த பஸ், அவள் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சைலஜா உயிரிழந்தாள். அவளது உடலை பார்த்து தந்தை அரிகரன் கதறி அழுதார். இதைக் கண்டு கொதித்துப்போன பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் வந்த சுரேசை பிடித்து அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக கிண்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் விரைந்து வந்து வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் இன்று காலையில் சுரேஷ் கைது செய்யப்பட்டார். இவர் போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது தெரியவந்தது.

வழக்கமாக இதுபோன்ற விபத்துகள் ஏற்படும்போது 304ஏ ஐ.பி.சி. (விபத்து மரணம்) என்ற சாதாரண சட்டப் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள். ஆனால் கடந்த 30 நாட்களுக்கு முன்பு, சுப்ரீம் கோர்ட்டு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

குடிபோதையில் வாகனங்களை ஓட்டி பொதுமக்களுக்கு மரணம் ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதன்படி, சென்னையில் குடித்து விட்டு வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்கள் மீது 304(2) ஐ.பி.சி. (அதிவேகமாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துதல்) என்ற சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிறுமி சைலஜாவின் உயிர் பலிக்கு காரணமான சுரேஷ் மீது இந்த சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்கும்.

பொது மக்களின் உயிரை பறிக்கும் பைக் ரேஸ்களில் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்த பணக்கார வாலிபர்களே அதிகம் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்தனர். இவர்கள் இதனை பொழுதுபோக்காகவே செய்து வருகிறார்கள். இதன் பின்னணியில் இருக்கும் ஆபத்தை உணர்வதில்லை.

பைக் ரேசுக்கு இவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். அன்றைய தினம்தான் சாலைகளில் போக்குவரத்து போலீசார் குறைவாக இருப்பார்கள். இது பைக்ரேசில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

எனவே போலீசார் வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் வாலிபர்களை மடக்கி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About