Friday, May 25, 2012

thumbnail

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: விரைவில் மின்வெட்டு தீரும்

சென்னை, மே.26-


தமிழகத்தில் மின்சார தேவை அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக மின்வெட்டு நிலவிவருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் காற்றின் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து, காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார உற்பத்தி அதிகரிக்க தொடங்கியது. இதனால், சென்னை தவிர தமிழக கிராமங்களில் மின் வெட்டு நேரம் படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக காற்றின் வேகம் குறையத் தொடங்கியது. இதனால், காற்றாலை மின்உற்பத்தியும் 20 சதவீதமாக குறைந்தது. இதற்கிடையே கடந்த வாரம் மீண்டும் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியது. காற்றாலை மின் உற்பத்தியும் 2,500 மெகாவாட் அளவுக்கு உயரத் தொடங்கியது.

நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த ஒரு நாளில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி 3,248 மெகா வாட்டாக அதிகரித்தது. அதாவது, தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த மின் உற்பத்தியில் 3-ல் ஒரு பங்கு காற்றாலை மூலம் கிடைத்தது. காற்றாலை மூலம் மின் உற்பத்தி இந்த அளவுக்கு அதிகமாக கிடைப்பது இதுவே முதல் முறையாகும். அதே நேரத்தில், நுகர்வோர்களால் 72.002 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய காற்றாலை சங்க தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் கூறும்போது, ‘25-ந் தேதி காலை 8 மணி நிலவரப்படி, காற்றாலை மூலம் 33 சதவீத மின் உற்பத்தி கிடைத்துள்ளது. இதை ஒரு உலக சாதனை என்றே சொல்ல வேண்டும். எந்த ஒரு நாட்டிலும் காற்றாலை மூலம் இந்த அளவுக்கு மின் உற்பத்தி செய்தது கிடையாது. வரும் ஜுன், ஜுலை மாதங்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், காற்றாலை மின் உற்பத்தி மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, காற்றாலை மின்சார உற்பத்தியை சரியாக பயன்படுத்திய மின்வாரிய என்ஜினீயர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்’ என்றார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்பட இருப்பதால் தமிழ்நாட்டில் மின்வெட்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About