Friday, May 18, 2012

thumbnail

லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை,சட்டபடி சந்திப்பேன் - வீரபாண்டி ஆறுமுகம்

சேலத்தில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் இன்று காலை கோவையை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. சண்முக பிரியா தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் 11.30 மணி வரை சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிந்து வெளியே வந்த வீரபாண்டி ஆறுமுகம் நிருபர்களிடம் பேசியபோது " இந்த சோதனை நான் எதிர்பார்த்தது தான். அ.தி.மு.க. அரசு தொடர்ந்து கழகத்தினர் மீது பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் எனது வீட்டில் சோதனை செய்தனர். சொத்து குவிப்பு எதுவும் நடந்து உள்ளதா என்று இந்த சோதனை நடந்தது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களது கடமையை செய்தனர். நான் எந்த தலையிடும் செய்யவில்லை. முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். போலீசார் எனது வீட்டில் சோதனையின் போது பார்த்ததை பதிவு செய்து விட்டு எனக்கும் ஒரு நகலை கொடுத்து விட்டு சென்றனர். இந்த சோதனையை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றார். பின்னர் அவரிடம் நிருபர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சுமூகமாக நடந்து கொண்டீர்களா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த வீரபாண்டி ஆறுமுகம், இந்த சோதனையின் போது சுமூகமாக நான் நடந்து கொண்டேன். போலீசார் சந்தேகம் உள்ளது பற்றி கேட்டதற்கு நான் விளக்கமாக பதில் அளித்தேன். கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தேன். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் இருந்து விடுதலை ஆனேன்.

இதேபோல் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்து உள்ளேன். இந்த கால கட்டத்தில் சொத்துக்கள் எதுவும் வாங்கப்பட்டதா என லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அ.தி.மு.க. அரசு முதலில் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About