Friday, May 25, 2012

thumbnail

ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: ரிசர்வ் வங்கி கவர்னருடன் பிரதமர் ஆலோசனை

புதுடெல்லி,மே.26-


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த புதன்கிழமை, முன் எப்போதும் இல்லாத அளவாக ஒரு டாலருக்கான ரூபாய் மதிப்பு 56 ரூபாயாக சரிவடைந்தது. இந்த வீழ்ச்சி காரணமாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பொருட்களின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், இப்பிரச்சினை குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ், திட்ட கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா ஆகியோருடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் சி.ரங்கராஜனும் உடன் இருந்தார். இந்த ஆலோசனை குறித்து பேசிய சி.ரங்கராஜன், ’ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பிரதமர் எங்களுடன் ஆலோசனை நடத்தினார். ஒட்டுமொத்த பொருளாதார சூழ்நிலை குறித்தும் விவாதித்தோம். ரூபாய் மதிப்பு சரிவடைவதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்க டாலரை மொத்தமாக விற்று விடலாம். நான் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது இப்படி செய்யப்பட்டது. ஆனால் இந்த யோசனையை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்’ என்றார்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்க டாலரை விற்கும் யோசனை பரிசீலனையில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் தெரிவித்தார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About