Tuesday, October 02, 2012

thumbnail

சபாநாயகர் வேட்பாளர் தனபால்: ஜெயலலிதா அறிவிப்பு- 10-ந்தேதி சட்டசபை கூடுகிறது

தமிழக சட்டசபை சபாநாயகராக இருந்த டி.ஜெயக்குமார் கடந்த 29-ந்தேதி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்தார்.
 
புதிய சபாநாயகர் தேர்ந்து எடுக்கப்படும் வரை துணை சபாநாயகர் ப.தனபால் தற்காலிகமாக சபாநாயகர் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
 
புதிய சபாநாயகர் தேர்தலை நடத்துவதற்காக தமிழக சட்டசபை வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) காலை கூடுகிறது. முன்னதாக 9-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
 
சபாநாயகர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக தற்போதைய துணை சபாநாயகர் ப.தனபால் நிறுத்தப்பட்டுள்ளார். இதுபற்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
10.10.2012 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளராக ப.தனபால் (ராசிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 
இதற்கிடையே 10-ந்தேதி சட்டசபை கூடுவதற்கான அறிவிப்பையும், சபாநாயகர் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பையும் கவர்னர் ரோசய்யா வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் கூறியிருப்பதாவது:-
 
தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசமைப்பு, பிரிவு 174(1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை ஏற்கனவே அறிவித்த 30.10.2012-ம் ஆம் நாளுக்கு பதிலாக 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
டி.ஜெயக்குமார் பேரவைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 7 (1)-ன் கீழ் 2012-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாள் (புதன்கிழமை) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று தமிழ்நாடு ஆளுநர் "நாள்'' குறித்துள்ளார்.
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 7(2)-ன்கீழ், 2012-ஆம் அண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் நாள் (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12.00 மணி வரையில் பேரவைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புத்தாள்கள் சட்டமன்றப் பேரவைச் செயலாளரால் பெற்றுக் கொள்ளப்பெறும்.
 
வேட்புத்தாள்களை செயலாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
சபாநாயகர் தேர்தலுக்கான மனுதாக்கல் வருகிற 9-ந்தேதி காலை தொடங்குகிறது. பகல் 12 மணி வரை மனுக்கள் பெறப்படும். ப.தனபால் அன்று மனுதாக்கல் செய்கிறார். முன்னதாக அவர் துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வார்.
 
தற்போது சட்டசபையில் அ.தி.மு.க. பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் ப.தனபால் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. 10-ந்தேதி நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் புதிய சபாநாயகர் பதவி ஏற்கிறார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். இதற்காக மூத்த உறுப்பினர் ஒருவர் தற்காலிகமாக சபாநாயகராக நியமிக்கப்படுகிறார். புதிய சபாநாயகர் பதவி ஏற்றதும் அவரை மூத்த உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவிப்பார்கள்.
 
புதிய சபாநாயகர் பதவி ஏற்றதும் அவர் துணை சபாநாயகர் தேர்தலை நடத்துவார்.
 
புதிய சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ள ப.தனபால் 1951-ம் ஆண்டு மே 16-ந்தேதி சேலம் கருப்பூரில் பிறந்தார். எம்.ஏ. பட்டம் பெற்றவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், லோகேஷ் தமிழ்செல்வன் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
 
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய பின்பு 1977-ம் ஆண்டு நடந்த முதலாவது பொதுத் தேர்தலில் சங்ககிரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1980, 1984, 2001-ம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
2001-ல் உணவு மற்றும் கூட்டுறவு துறை அமைச்சராக பணியாற்றினார். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். அவர் துணை சபாநாயகராக செயல்பட்டு வந்தார்.       

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About