ஆண்டாள்
ஆண்டாள்
தமிழ் நாட்டில் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த
வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும்
12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார்.
ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற்
தொகுதிகளை இயற்றியுள்ளார்.வைணவ சமய நூல்கள்
கூறும் இவரது வரலாறு, இறைவன்
மீது இவர் கொண்டிருந்த காதலை
விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.
ஆண்டாளின்
தோற்றமும் வாழ்க்கையும்
ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ்
கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த
விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால்
கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மலர்கள்
கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர்.
தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும்,
குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட
கொடை எனக் கருதி வளர்த்து
வரலானார். அவர் அக்குழந்தைக்கு இட்ட
பெயர் கோதை.
இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன
தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர்
கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம்
வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த
பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை
கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன்
மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக
அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற
எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக
நினைத்துப் பாவனை செய்துவந்தார்.
கோயிலில்
இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும்
அவருக்குத் தெரியாமல் தான் அணிந்த பின்னர்
திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய
மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து
கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை
ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து
இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில்
தோன்றி கோதை அணிந்த மாலைகளே
தனக்குப் பிடித்தவை எனவும் அவற்றையே தனக்குச்
சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டாராம். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் இறைவனை ஆண்டவள்
என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
கோதை மண வயதடைந்த பின்னர்
அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண
ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று
பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது
கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன்,
கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தாராம். குறித்த நாளன்று கோயிலுக்கு
அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று
இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது கதை.
ஆண்டாள்
பாடல்கள்
ஆண்டாள்
தனது 15ஆம் வயதில் இறைவனுடன்
இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார்
திருமொழி என்னும் இரண்டு நூல்களை
இயற்றியுள்ளார்.இவ்விரு நூல்களும் அதன்
இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து
போற்றப்படுகின்றது.
இவரது முதல் படைப்பான திருப்பாவை
30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவையில் ஆண்டாள்
தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக்
கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.
இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது.இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு
பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது.இது வடமொழியில் எழுதப்பட்ட
ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும்
நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது.
ஆண்டாளின்
இவ்விரு படைப்புகளும் தமிழ்நாட்டின் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஓதப்படுகின்றது.
திருப்பாவைச்
சிறப்பு
வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக்
கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும்.
மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக்
காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும்
இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு.
தமிழில் புனையப்பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும்,
மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை
இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை
தனக்கும் ஒரு தனிச் சந்நதி
கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு
அடியவருக்கும் காணப் பெறாத தனிச்
சிறப்பாகும். மொழி வேறுபாடின்றி, வைகுந்த
நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக்
காணப்படுவது திருப்பாவைத் தொழுகை.
திருப்பாவையின்
சிறப்பு முதன்மையாக அதன் பக்திப் பெருக்கு
மட்டுமல்ல. பாற்கோவை முழுதும் விரவிக் கிடக்கும் கோதை
மாதவன் பாற்கொண்ட தூய காதலமுதம் மற்றும்
அதன் விளைவாய் அடியவருக்கும் அனைவருக்கும் அரும்பெரும் வரமாகக் கிடைத்த தமிழ்
மணம்.
திருப்பாவையின்
இந்த முச்சுவையும் தித்திக்கும் பாக்களில் இரண்டொன்றைக் கீழே காணலாம்:
கோதை நமக்கு அளிக்கும்
பக்திச் சுவையைக் காணலாம். ஓரே அடிகொண்டு உலகையே
அளந்த பரந்தாமனின் புகழைப் பாடுவதனாலேயே புவியோர்
தமது துன்பம் நீங்கி இன்புற்றிருக்க
இயலும் என இப்பாடலின் மூலம்
இயம்புகிறாள் கோதை:
ஓங்கி உலகளந்த உத்தமன்
பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்கு சாற்றுநீ
ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல்
பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர்
எம்பாவாய்
வைணவத் தத்துவ இயல்பின்படி,
எம்பெருமானைச் சென்றடைய வழி அவனுடைய திருவடிகளில்
சரணாகதியாவதேயாகும். இதனைப் பக்தியாலும் மேற்கொள்ளலாம்;
அன்றி கிருஷ்ணப் பிரேமை என்னும் காதலாலும்
அடையலாம் என்று சான்றளித்தவள் கோதை.
குன்றெடுத்த கோபாலன் ஒருவனே ஆண்மகன்;
அவனது அடியார் அனைவரும் அவனது
காதலில் கட்டுண்ட பெண்டிரே என்பதே கிருஷ்ணப் பிரேமை.
இதனை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது
பின்வரும் திருப்பாவை:
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால்
கட்டிலின்மேல்
மெத்த பஞ்சசயனத்தின் மேல்
ஏறிக்
கொத்தலர்
பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா...."
வைணவத்தாரோ வேற்று மதத்தினரோ, அன்றி
இறை நம்பிக்கை அற்றவரே ஆயினும், கோதையின்
தீஞ்சுவைத் தமிழுக்கு அடிமையாகாது இருத்தல் அரிது. திருப்பாவைப் பாடல்கள்
அவற்றைப் படிக்கையிலேயே சித்திரப் பண்பு (picturesque quality) பெறுகின்ற பேரானந்தம் அளிப்பவை. இதற்கு எடுத்துக் காட்டாக,
மழையைப் பற்றிய இப்பாடலைப் படிக்கையில்,
வானின்றும் மண்ணில் வீழும் மழையை
நேராகவே காண்பது போன்ற ஒரு
அனுபவம் பெறலாம்:
ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ
கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு
ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல்
மெய்கறுத்துப்
பாழிய்அம் தோளுடைப் பத்பநாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி
போல் நின்றுஅதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த
சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்
நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர்
எம்பாவாய்