Monday, December 17, 2012

thumbnail

ஜப்பான் பொதுத் தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான ஷின்சோ அபே அமோக வெற்றி பெற்றுள்ளார்

டோக்கியோ: ஜப்பான் பொதுத் தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான ஷின்சோ அபே அமோக வெற்றி பெற்றுள்ளார். ஜப்பானில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயக கட்சி சார்பில் யோஷிஹிகோ நோடா பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. ஒரு மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற சட்டப்படி, ஜப்பானில் நேற்று பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆளும் கட்சி சார்பில் யோஷி ஹிகோ நோடா மீண்டும் போட்டியிட்டார். முக்கிய எதிர்க்கட்சி லிபரல் டெமாக்ரட்டிக் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (58) போட்டியிட்டார். நேற்று நடந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியில், புகுஷிமா அணு உலைகள் பாதிக்கப்பட்டன. அதன்பின் அணு உலைகள் மூடப்பட்டன. இதனால் மின் பற்றாக்குறை அதிகரித்தது. பல முன்னணி கம்பெனிகள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர தொடங்கின. இதனால் 2030ம் ஆண்டுக்குள் அணு உலைகள் எல்லாவற்றையும் படிப்படியாக மூடி விடலாம். அதுவரை ஒரு சில அணு உலைகள் இயங்கட்டும் என்று பிரதமர் நோடா உத்தரவிட்டார். மேலும், கடும் பொருளாதார நெருக்கடியிலும் ஜப்பான் சிக்கியது. இதனால் ஆளும் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கருத்துக் கணிப்புகள் கூறியபடி எதிர்க்கட்சியான லிபரல் டெமாக்ரட்டிக் கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. சிறிய கட்சியுடன் கூட்டணி சேர்ந்து லிபரல் டெமாக்ரட்டிக் கட்சி 325 இடங்களை பிடித்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஆட்சியை அமைக்க தகுதி பெற்றுள்ளது. பிரதமராக அபே மீண்டும் பதவியேற்க உள்ளார். இவர் கடந்த 2006- 2007ல் ஓராண்டு பிரதமராக இருந்த போது இந்தியாவுடன் மிக நெருக்கமாக இருந்தார். ஜப்பான் - இந்திய உறவை பலப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத் தார். அபே மீண்டும் பிரதமராக உள்ளது இந்தியாவுக்கு சாதகம் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Friday, December 14, 2012

thumbnail

ஆண்டாள்

ஆண்டாள்
ஆண்டாள் தமிழ் நாட்டில் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.

ஆண்டாளின் தோற்றமும் வாழ்க்கையும்

ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். அவர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை.

இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார்.

 கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்த பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் பிடித்தவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டாராம். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் இறைவனை ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.

கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தாராம். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது கதை.
ஆண்டாள் பாடல்கள்

ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.

இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது.இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது.இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது.

ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் தமிழ்நாட்டின் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஓதப்படுகின்றது.
திருப்பாவைச் சிறப்பு

வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு. தமிழில் புனையப்பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும். மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை.

திருப்பாவையின் சிறப்பு முதன்மையாக அதன் பக்திப் பெருக்கு மட்டுமல்ல. பாற்கோவை முழுதும் விரவிக் கிடக்கும் கோதை மாதவன் பாற்கொண்ட தூய காதலமுதம் மற்றும் அதன் விளைவாய் அடியவருக்கும் அனைவருக்கும் அரும்பெரும் வரமாகக் கிடைத்த தமிழ் மணம்.

திருப்பாவையின் இந்த முச்சுவையும் தித்திக்கும் பாக்களில் இரண்டொன்றைக் கீழே காணலாம்:

    கோதை நமக்கு அளிக்கும் பக்திச் சுவையைக் காணலாம். ஓரே அடிகொண்டு உலகையே அளந்த பரந்தாமனின் புகழைப் பாடுவதனாலேயே புவியோர் தமது துன்பம் நீங்கி இன்புற்றிருக்க இயலும் என இப்பாடலின் மூலம் இயம்புகிறாள் கோதை:

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
    நாங்கள் நம்பாவைக்கு சாற்றுநீ ராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
    ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக
    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
    தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
    வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

    வைணவத் தத்துவ இயல்பின்படி, எம்பெருமானைச் சென்றடைய வழி அவனுடைய திருவடிகளில் சரணாகதியாவதேயாகும். இதனைப் பக்தியாலும் மேற்கொள்ளலாம்; அன்றி கிருஷ்ணப் பிரேமை என்னும் காதலாலும் அடையலாம் என்று சான்றளித்தவள் கோதை. குன்றெடுத்த கோபாலன் ஒருவனே ஆண்மகன்; அவனது அடியார் அனைவரும் அவனது காதலில் கட்டுண்ட பெண்டிரே என்பதே கிருஷ்ணப் பிரேமை. இதனை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது பின்வரும் திருப்பாவை:

    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்
    மெத்த பஞ்சசயனத்தின் மேல் ஏறிக்
    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
    வைத்துக் கிடந்த மலர்மார்பா...."

    வைணவத்தாரோ வேற்று மதத்தினரோ, அன்றி இறை நம்பிக்கை அற்றவரே ஆயினும், கோதையின் தீஞ்சுவைத் தமிழுக்கு அடிமையாகாது இருத்தல் அரிது. திருப்பாவைப் பாடல்கள் அவற்றைப் படிக்கையிலேயே சித்திரப் பண்பு (picturesque quality) பெறுகின்ற பேரானந்தம் அளிப்பவை. இதற்கு எடுத்துக் காட்டாக, மழையைப் பற்றிய இப்பாடலைப் படிக்கையில், வானின்றும் மண்ணில் வீழும் மழையை நேராகவே காண்பது போன்ற ஒரு அனுபவம் பெறலாம்:

    ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
    ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
    பாழிய்அம் தோளுடைப் பத்பநாபன் கையில்
    ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்றுஅதிர்ந்து
    தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

Thursday, December 13, 2012

thumbnail

தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார் முதல்வர்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட சுமார் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு  தமிழக முதல்வர் பணி நியமன ஆணையை வழங்கினார்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை சென்னை ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரித் திடலில் நடைபெற்ற விழாவில் 20,920 ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா  வழங்கினார்.
thumbnail

புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஜெயலலிதா

சென்னை காமராஜர் சாலையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
 அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவிடம் காமராஜர் சாலையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகே 8.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
 இதன் நுழைவு வாயில் முகப்பை மாற்றியமைத்தல், முன்பக்க சுற்றுச்சுவரைப் புதுப்பித்தல் போன்ற பணிகள் ரூ.3 கோடியே 40 லட்சம் செலவிலும், எழிலூட்டும் பணிகள் ரூ.4 கோடியே 30 லட்சம் செலவிலும் மேற்கொள்ளப்பட்டன.
 புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்ததோடு, எம்.ஜி.ஆரின் சமாதிக்கும் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 புதுப்பொலிவுடன் முகப்பு வாயில், புல் வெளி: நினைவிடத்தின் முகப்பு வாயில் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 அங்குள்ள திறந்தவெளி முழுவதும் கொரிய புல், பிரத்யேகமான செடி வகைகளான பல்மெரியா ஆல்பா, டேட் பாம், ஸ்பைடர் லில்லி, அடினியம் ஆகியவற்றைக் கொண்டு புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையும் கிரானைட் கற்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
 சமாதியைச் சுற்றி கிதார் வடிவில் புதிய நடைபாதையும், மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக சாய்வு நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதை ஓரங்களில் துருப்பிடிக்காத இரும்பு கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 சமாதியிலும், சமாதியைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள வளைந்த இதழ்களில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் மெருகேற்றப்பட்டுள்ளது.
 புல்வெளியின் நடுவில் நீருற்றும், நினைவிடத்தின் பின்பகுதியில் செயற்கை நீர்வீழ்ச்சியும் அமைக்கப்பட்டுள்ளன.
 அலங்கார மின் விளக்குகள் போதிய வெளிச்சத்துடன் சமாதி மற்றும் நினைவிடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.
 உயர் கோபுர மின் விளக்குகள் நுழைவு வாயிலிலும், சமாதியிலும் பொருத்தப்பட்டுள்ளன.

Wednesday, December 12, 2012

thumbnail

உலகின் மிக உயரமான கட்டிடம்-"பேர்ஜ் டுபாய்"

பேர்ஜ் கோபுரம் (Burj Tower)
[முக்கிய குறிப்பு: "பேர்ஜ் டுபாய்" தற்போது "பேர்ஜ் கலீஃபா" (Burj Khalifa)என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.உலகின் மிக உயரமான இந்த 828 மீற்றர் (2717 அடி) கோபுரத்தின் பெயர் மாற்றம் பின்னதான புதிய தகவல் யாவும் பிந்திய செய்திகள் பகுதியாக கட்டுரையின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.]
உலகின் அதி உயரமானதும் அதிசயம் பல கொண்டதுமான "பேர்ஜ் டுபாய்" கோபுரம் (Burj Dubai Tower). இதுவரை மனிதனால் பூமியில் உருவாக்கப்பட்ட மிகமிக உயரமான கட்டிடம் எனும் பெயர் பெறுகின்றது. இது இன்றய உலகில் அனைவர் கவனத்தையும் கவரும் நகரமான டுபாய் (ஐக்கிய அரபு இராச்சியம்-UAE) இல் அமைந்துள்ளது. "பேர்ஜ் டுபாய்" கோபுரம் கட்டுமான வேலைகள் 2004ம் செப்ரம்பர் 21 இல் தொடங்கி இப்போதும் நடைபெற்று வருகின்றது. 190 கெக்ரர் நிலப்பரப்பில் செயற்கை நதிகளுடன் உருவாகும் பிரமிப்பூட்டும் கட்டிடத்தின் வியக்கவைக்கும் தகவல்கள் கீழே தொடர்கின்றன.
  • கடிடத்தின் முழுமையான உயரம் 818 மீற்றர் (2,684 அடி) என இதுவரை சொல்லப் படுகின்ற போதிலும் இதன் உண்மையான உயரம் (இறுதிவரை இரகசியம் பேணப்படுகின்றது) திறப்பு விழா தினமான 2009ம் டிசம்பர் 20 அன்று வெளியாகும்.
  • "பேர்ஜ் டுபாய்" கோபுரத்திலுள்ள அடுக்குகள் (மாடி) எண்ணிக்கை 160 என இந்த கட்டிடத்தின் கட்டுமானத்தை கவனித்துவரும் Emaar Properties அறிவித்துள்ளது.
  • பேர்ஜ் டுபாய் கட்டுமானத்தில் பெருமளவில் உபயோகிக்கப்படும் உருக்கு , சிமெந்து கலவை , கண்ணடி இவற்றின் உத்தேசிக்கப்பட்ட அளவுகள் முறையே 39,000 மெற்றிக் தொன், 330,000 கன மீற்றர்,142,000 கன மீற்றர் என இதுவரை அறியப்படுகின்றது.
  • வேலையாட்கள் 10.000 க்கு மேல் எனவும் மணிக்கணக்கில் வேலை செய்யப்படும் நேரம் கணிக்கப்பட்டால் 29 மில்லியன் மேலான மணித்தியாலங்கள் எனவும் சொல்லப்படுகின்றது.
  • முழு கட்டிட அமைப்பு 1.60 சதுர கிலோ மீற்றர் பரப்பு நிலத்தில் அமைக்கப் படுவதுடன் இதற்கு செலவாகும் பணத்தின் மொத்தத் தொகை 8 பில்லியன் டொலர்கள்.
  • இதன் அத்திவாரம் 80,000 சதுர அடி பரப்பில் அமைந்த நிலபகுதி் 55 மீற்றர் (84 அடி) ஆழத்தில் அகழ்வு செய்யப்பட்டு ஆரம்பிக்கின்றது.
  • பேர்ஜ் டுபாய் கோபுரத்தின் முகப்பு ( சுற்றிவர ஆறு முகம்) இராட்சத உருக்கு சட்டங்கள், குழல்கள், கண்ணாடிகள் என்பவற்றினால் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.
  • முழுமையான கட்டிடம் 66 இரட்டை தட்டு மேல்கீழ்காவி (Double-deck elevators) ஒவ்வொன்றும் மணிக்கு 40 மைல்கள் அல்லது செக்கனுக்கு18 மீற்றர் வேகம் பயணிக்க வல்லதுடன் இதுவே இன்றுள்ள அதிவேகமுமாகும்.
  • மேல் சொல்லப்பட்ட வேகத்தில் கீழிருந்து மேல் செல்வதற்கு 15 நிமிட காலம் எடுக்கின்றது. இதில் ஒரே தடவையில் 42 பேர் பயணிகமுடியும்.
  • உலகில் உயரமான இந்த கட்டிடம் இராட்சத வெப்பமானியாகவும் (மாறும் வெப்பநிலை) உள்ளது. அதாவது இயற்கை வெப்பநிலை கட்டிடத்தின் கீள் பகுதியில் இருந்து மேல் உச்சியை நோக்கி 8 பாகை செல்சியசினால் (C0) குறைவடைகின்றது.
  • இந்த அதி உயர் கட்டிடம் தன்னகத்தே 5 மில்லியன் சதுர அடி அலுவலக உபயோக பகுதி, 175 ஹொட்டல் (Armani hotel) அறைகள், 900 தொடர்மாடிகள்(அபர்ட்மென்ட்ஸ்), 4 நீச்சல் தடாகம் , 150,000 சதுர அடி பரப்பில் உடற்பயிற்சி மையம், உலகின் மிக உயரத்திலுள்ள ( 124 வது மாடி) கண்டுகளிப்பு பகுதி என்பன குறிப்பிடக் கூடியன.
  • இந்த கட்டிடம் இதுவரை மிகப்பெரிய கட்டிடமாக கருதப்பட்ட தய்பெய் 101 (Taipei 101)ஐ விடவும் 1000 அடிகள் அதிக உயரமானது. தய்பெய் இதுவரை உலகின் மிக உயரமான கட்டிடமாக 101 மாடி (அடுக்கு) களுடன் இருந்துவந்தது. மேலும் இதன் உயரம் 1972 இல் இருந்து நெடு காலம் தனி இடத்தை பிடித்திருந்த "எம்பஃயர் ஸ்டேட்" இன் இரண்டு மடங்குகள் என்பதும் குறிப்பிடும் படியான விடயம்.
  • அதிகபட்சம் ஒரேநேரத்தில் 35,000 மக்களை உள்வாங்கக்கூடிய இந்த கட்டிடம் மொத்தமாக 15,000 யன்னல்களையும் கொண்டுள்ளது.
  • கட்டிடத்தின் நிலத்திற்கடியிலான 3,000 கார்கள் தரிப்பதற்கான இடவசதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • "பேர்ஜ்" சுற்று வட்டாரம் 22 மில்லியன் சதுர அடி பரப்பு நிலத்தினை உள்ளடக்கும். இந்த நிலப்பரப்பில் 3000 தனியார் வீடுகள், 19 அடுக்கு மாடி கோபுரங்கள் , 9 நவீன ஹொட்டல்கள் , 6 ஏக்கர் பூங்கா , 12 ஹெக்ரயர் பரப்பில் நீர் தடாகம் என்பனவும் அமைக்கப்படுகின்றது.
  • இந்த கோபுரம் (பேர்ஜ் டுபாய்) இயற்கை சீற்றத்தில் சிக்கும் காலத்தில் இதன் முனை பகுதி அதிகபட்சம் நான்கு அடிகள் பாக்கம் பக்கமாக ஊசலாடும் என கணிப்பிடப்படுகின்றது.
  • "பேர்ஜ்" என்பது அரபு மொழியில் நட்சத்திர கூட்டு (constellation) என அர்த்தம் சொல்லப்படுகின்றது.
  • உலகின் உயரமான இந்த அபார சாதனைகள் கொண்ட கட்டிடம் தெளிவான காலநிலையில் 60 மைல் தூரத்தில் இருந்து சாதாரண கண்களுக்கு புலனாகும் என சொல்லப்படுகின்றது.
  • சிக்காகோ கட்டிட வரைஞரால் (Chicago architects) வடிவமைக்கப்பட்ட "பேர்ஜ் டுபாய்" பாலைவனத்தில் கட்டிடக்கலை நிகழ்த்திய அற்புதம் என்று வர்ணிக்கப் படுகின்றது.
    • வேறு ஒரு தகவல் :- இந்த அபார விடயத்தை யப்பான் நாடு முறியடிக்கும் காரிகமாக எடுத்து 196 மாடிகள் 1000 மீற்றர் உயரமுடன் கட்ட திட்டம் தீட்டிவருகின்றது .
    • (இந்த கட்டிடம் தொடர்புடைய விடயங்கள் கட்டிடம் முடிவுறும் காலத்தில் மீள் புதுப்பிக்கப்படும்.)
  • மேலுள்ள தகவல் தொடர்புடைய வீடியோ (youtube) காட்சி
  • இது தொடர்பில் முழுபக்க விளக்கம் .
***** பிந்திய செய்திகள்.
ஆரம்பத்திலிருந்து (திட்டமிடலில் இருந்து கட்டிடம் பூர்த்தியாகும் வரை) "பேர்ஜ் டுபாய்" என அழைக்கப்பட்டுவந்த உலகின் மிக உயரமான கட்டிடம் 2010 ம் வருடம் ஜனவரி 4 ம் திகதியிலிருந்து "பேர்ஜ் கலீஃபா" (Burj Khalifa) என பெயர்மாற்றம் பெற்றுள்ளது. "பேர்ஜ் கலீஃபா" கட்டிடத்தின் பிமாண்டமான திறப்பு விழா 2010 ம் வருடம் ஜனவரி 4 ம் திகதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா திட்டமிட்ட தினத்திலும் சிலநாள் தாமதித்து நடைபெற்ற போதிலும் இந்த திறப்பு விழா தினமானது தற்போதைய டுபாயின் ஆட்சியாளரின் 4 வது ஆண்டு பூர்த்தியினை நினைவு கூரும் தினத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டது . மேலும் இறுதி நேரத்தில் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டிய (சிக்கிய) கட்டுமான வேலைகளை பூர்த்தி செய்வதற்கு வேண்டிய மேலதிக பண உதவி ஐக்கிய அரபு ராச்சியத்தின் ஜெனாதிபதி Sheikh Khalifa அவர்களின் பணிப்பின் பிரகாரம் அபுதாபியினால் வழங்கப்பட்டது விசேட அம்சமானது. மேலே சொல்லப்பட்ட இந்த உதவி காரணமான கெளரவிப்பாகவே கட்டிடத்தின் புதிய பெயரில் ஜனாதிபதியின் பெயர் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது . மேலும் இத்தனை சோதனைகள் , வேதனைகள், சாதனைகள் பின்னால் மறைக்கப்பட்ட கட்டிடத்தின் நிஜமான உயரம் 828 மீற்றர் (2717 அடி) என உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட நாளாகவும் இந்த திறப்பு விழா அமைந்திருந்தது.
இயற்கையின் சீற்றத்திற்கு ஈடுகொடுத்து ஊசலாடும் இந்த உலக சாதனையின் சிகரம் இன்றய உலக பொருளாதார தாக்கத்தினால் ஆட்டம் கண்டுள்ளது.அதாவது கட்டுமான இறுதி வேலைகளுக்கு கடன்படும் நிலைக்கு தள்ளப்பட்டது மல்லாமல் கட்டிடத்தின் விலை 50% விழுக்காடு கண்டுள்ளது புதிய தகவல். எது எப்படி இருந்த போதிலும் 5 வருடங்களின் மேலாக 2 பில்லியன் டொலர் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட "பேர்ஜ் டுபாய்" என அறியப்பட்ட "பேர்ஜ் கலீஃபா" உலகின் மிக உயரமான கட்டிடம் (828 மீற்றர்) பெயரையும் புகழையும் வரலாற்றில் இடம் பிடிக்கின்றது என்பது உறுதியான விடையம்.
பிமாண்டமான திறப்பு விழா தொடர்பிலான வீடியோ பதிவு.
"பேர்ஜ் கலீஃபா" வடிவம் 360 பாகை வடிவில் பார்வையிட1
"பேர்ஜ் கலீஃபா" வடிவம் 360 பாகை வடிவில் பார்வையிட2
Big Picture
skyscrapercity.com




map

About