சோனியாவின் வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.1880 கோடி
அரசுப் பணம் செலவிடப்பட்டதாக நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு
பிரதமர் அலுவலகம் தனது மறுப்பைத் தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்
தலைவர் சோனியாவின் சிகிச்சைக்காக எந்த செலவும் செய்யவில்லை என்று
மறுத்துள்ளது. மேலும், வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட வகையில்,
சிகிச்சைக்கான செலவாக ரூ.1880 கோடி மக்களின் வரிப்பணத்தில் இருந்து செலவு
செய்யப்பட்டதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டையும்
அது மறுத்துள்ளது.
இன்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
ஐ.மு.கூட்டணித் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அரசு செலவு செய்தது
என்று கூறப்படும் குற்றச்சாட்டை தீவிரமாக எடுத்துக் கொண்டு அரசு விளக்கம்
அளிக்க விரும்புகிறது. அவருக்கு ஆகும் பாதுகாப்புச் செலவுகள், சிறப்பு
காவல் குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 8 வருடங்களில், பெல்ஜியம்
அரசு விடுத்த அழைப்பை ஏற்று, தேசிய அளவிலான கௌரவ விருது பெற பெல்ஜியம்
சென்றார் சோனியா. அதற்கான செலவு, இந்திய கலை உறவு பரிவர்த்தனை அமைப்பினால்
ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதுவும் ரூ.3 லட்சம் ரூபாய்தான். அதைத் தவிர
ஐ.மு.கூட்டணித் தலைவரின் மருத்துவச் செலவுக்காக எந்தத் தொகையும்
செலவிடப்படவில்லை...” என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களை
மையமாகக் கொண்டு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இத்தகைய குற்றச்சாட்டை
திங்கள் கிழமை முன்வைத்தார்.
No Comments