Sunday, July 08, 2012

thumbnail

Indiya Jananayaka Katchi (IJK) leader Paari Vendhar said that, TN state government is planning to increase the sales of liquor items in the state/ மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் இந்திய ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைக்கும்: பாரிவேந்தர்

மதுரை: மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் இந்திய ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைக்கும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது குறித்து கூறியதாவது:
இந்திய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகின்றன. கட்சி தொடங்கி 8 மாதத்தில் 2011-ல் பொதுத்தேர்தலை எதிர்கொண்டு, 131 தொகுதிகளில் போட்டியிட்டோம். படித்த இளைஞர்களுக்கு நாங்கள் அரசியல் தளத்தை ஏற்படுத்திக்கொடுத்து, அதற்குள் அவர்களை கொண்டு வர விரும்புகிறோம்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மக்களின் நிரந்தர தேவையான மின்சாரத்தை தொடர்ந்து கொடுக்க நடவடிக்கை இல்லை. அ.தி.மு.க. ஆட்சி முடியும் வரை மின்சாரத்தை தொடர்ந்து முழுமையாக கொடுக்க முடியாது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்க உள்ளோம். அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம். அந்தக் கட்சிக்குத்தான் குடும்ப அரசியல் இல்லை. இது எங்கள் கட்சி கொள்கையுடன் ஒத்துள்ளது.
பா.ஜ.க ஆட்சியில் லஞ்சம் குறைவாக இருந்தது. தங்கநாற்கர சாலை போன்ற திட்டங்கள் பா.ஜ.க. ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டன. பா.ஜ.க. மதவாத கட்சி என்கிறார்கள். முதலில் நாம் எல்லோரும் இந்தியர் என்ற நிலை வரும் போது மதவாதம் என்ற நிலை வராது என்றார் அவர்.
தமிழகத்தில் மது விற்பனையில் ரூ.21 ஆயிரம் கோடி வருவாயை அரசு எதிர்பார்க்கிறது. இது ரூ.40 ஆயிரம் கோடியாக உயரும் போது, தமிழகத்தில 70 சதவீதம் பேர் மது அருந்தும் நிலை உருவாகிவிடும். இலவசத்தை தவிர்த்தாலே மது வருவாய் தேவையில்லாமல் போகும்.
கல்வி நிறுவனம் நடத்தும் எனக்கு, அரசியல் தேவையில்லை. மோசமான அரசியல் சூழ்நிலையை வேடிக்கை பார்க்க மனமின்றி அரசியலுக்கு வந்தேன். தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுவதில்லை.
வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகள் பணம் கொடுத்து ஓட்டுகளைப் பெறுகின்றனர். இதனால் மக்களும் ஊழல்வாதிகளாக மாறும் சூழல் உள்ளது. தமிழகத்தில் அறிவிக்கும் திட்டங்களை, நடைமுறைப்படுத்துவது இல்லை. தனியார் ஊக்குவிப்பால் மும்பை, குஜராத் வளர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல தமிழகத்திலும் வளர்ச்சிக்கு தாராள தனியார்மயத்தை அனுமதிக்க வேண்டும்.
வடக்கிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதால், சிங்களர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம். மாறாக பாஜகவை ஆதரிப்போம்.
காரணம் காங்கிரஸ் கட்சியோடு பாஜகவை ஒப்பிட்டு பார்த்தால், பாஜகவில் ஊழல் குறைவு என்றே கூற வேண்டும். பலரும் கூறுவது போல பாஜகவில் மதவாதம் துளியும் இல்லை என்றார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About