Friday, June 01, 2012

thumbnail

தமிழகத்தில் தாமதமாக துவங்குகிறது தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 5ம் துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அடுத்த சில நாட்களில் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது. அதன்பின் படிப்படியாக அதிகரித்த அக்னி வெயில், அனல் காற்றுடன் சுட்டெரித்தது. குறிப்பாக சென்னை, வேலூர், மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வறுத்தெடுத்தது. அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னும் இந்த நிலை நீடித்தது.தென்மேற்கு பருவமழை கேரளாவில் சற்று தாமதமாக, வரும் 5ம் துவங்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பயன் இல்லை என்றாலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, ஊட்டி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்யும். இதன் மூலம் கடுமையான வெயிலால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம்.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, "தென்மேற்கு பருவமழை வழக்கமாக மே இறுதி அல்லது ஜூன் 1ம் தேதி பெய்ய வேண்டும். ஆனால், இந்த ஆண்டு தாமதமாக 5ம் தேதி பெய்யலாம். தென்மேற்கு பருவமழையால் தமிழகத்திற்கு எவ்வித பயனும் இல்லை. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். கேரளாவில் மழை பெய்தால், குற்றாலத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். அங்கு சீசனும் களைகட்டும்,' என்றார்

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About