Showing posts with label parliment. Show all posts

Thursday, August 30, 2012

thumbnail

நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரம்: பாராளுமன்றம் 7-வது நாளாக முடக்கம்

நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கியதில் தவறான கொள்கையை கடைப்பிடித்ததால் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது.


இதையடுத்து முறைகேடு நடந்த காலகட்டத்தில் நிலக்கரி துறை பொறுப்பு வகித்த பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா கூறி வருகிறது.

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் இந்த பிரச்சினையை கிளப்பி வருகிறார்கள். இதனால் பாராளுமன்றம் தொடங்கியது முதல் 6 நாட்களாக அலுவல் எதுவும் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

பிரதமர் பதவி விலகும் வரை பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என்று பாரதீய ஜனதா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதற்கிடையே ஒருநாள் விடுமுறைக்குப்பின் பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது.

அப்போது பாரதீய ஜனதா எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினார்கள். சபையில் கடும் அமளி நிலவியதால் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் டெல்லி மேல்-சபையிலும் காலை 11 மணிக்கு சபை கூடியதும் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடியது. அப்போதும் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளி ஏற்படுத்தியதால் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக 7-வது நாளாக பாராளுமன்றம் முடக்கப்பட்டது.

Saturday, May 26, 2012

thumbnail

22 நாட்கள் பார்லிமென்டிற்கு வராமல் "டிமிக்கி' கொடுத்த ராகுல்: சபையில் வாயே திறக்காத சோனியா

பாரதத்தின் இளைய தலைவர், காங்., கட்சியில் எப்போது வேண்டுமானாலும், பிரதமர் பதவியை அடைய தகுதி பெற்றவர் என்று கூறப்படும் ராகுல், பார்லிமென்டில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 22 நாட்கள் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை.

35 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் 13 நாட்களே சபைக்கு வந்திருந்தார். மத்திய பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என, சபையின் எந்த பெரிய விவாதங்களிலும் அவர் பங்கு பெறவில்லை.காங்கிரஸ் தலைவர் சோனியா, 16 நாட்கள் சபைக்கு வரவில்லை. எப்போதும் போல், அவர் சபையின் எந்த விவாதங்களிலும் பங்கு பெறவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மற்றும் பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, லோக்சபாவின் அனைத்து நாள் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று 100 சதவீத வருகையை பதிவு செய்துள்ளார்.

சம்பளம்:லோக்சபாவின் "இன்னர் லாபி'யில் உறுப்பினர்களுக்கான வருகைப் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களைத் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும், இந்த பதிவேட்டில் கையொப்பமிட்டால் தான் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும்.அமைச்சர்கள் தத்தம் அமைச்சகங்கள் மூலம் சம்பளம், படி போன்றவைகளை பெறுகின்றனர். அதனால், அமைச்சர்கள் வருகையை லோக்சபா அலுவலகம் பதிவு செய்வதில்லை.

திரிவேதி "டிமிக்கி':சபையின் முன்வரிசையில் அமரும் முன்னாள் பிரதமர் தேவகவுடா இந்தக் கூட்டத்தொடரில் 30 நாட்கள் சபைக்கு வரவில்லை. அவருடைய மகனும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமியோ ஆறு நாட்கள் தான் சபைக்கு வந்துள்ளார்.ரயில்வே பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்து பின்னர் பதவியை ராஜினாமா செய்த தினேஷ் திரிவேதி, சபைக்கு, 20 நாள் "டிமிக்கி' கொடுத்துள்ளார். திரிவேதியின் அமைச்சர் பதவியை, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பிடுங்கிய பிறகு அவரை, சபை பக்கம் காண முடியவில்லை.எதிர்க்கட்சி வரிசையில் பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர்கள், சபை நடவடிக்கைகளில் பெரும்பாலும் பங்கு பெற்றுள்ளனர்.

Saturday, May 19, 2012

thumbnail

தனியாருக்கு நிலம் கையகப்படுத்தும் வேலையில் அரசு ஈடுபடக்கூடாது: பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை

புதுடெல்லி,மே.19-
 
தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தனியார் தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்று ஊரக வளர்ச்சித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதற்கு தொழில்துறையிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
 
நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, புதிதாக நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் மசோதா என்ற புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்து, அது நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்விற்கு அனுப்பப்பட்டது. தற்போது, அந்த நிலைக்குழு தனது பரிந்துரைகளை அளித்திருக்கிறது.
 
அதன்படி, ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறையைப் போல, அரசு இனிமேல் தனியாருக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. ரெயில்வே, நெடுஞ்சாலை விரிவாக்கம், உள்ளிட்ட பொதுப்பணிகளுக்காக மட்டுமே நிலம் கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
மேலும், தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தும்போது, கிராமப்புறமாக இருந்தால் அந்த நிலத்தின் சந்தை மதிப்பில் நான்கு மடங்கும், நகர்ப்புறமாக இருந்தால் இரண்டு மடங்கும் கொடுக்க வேண்டும். தேவையான நிலத்தின் உரிமையாளர்களில் 80 சதம் பேரிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். வாங்கிய நிலத்தை மேம்படுத்தி, அதில் 20 சதத்தை நில உரிமையாளருக்கே திருப்பி வழங்க வேண்டும். 10 ஆண்டுகளில் நிலத்தை விற்றாலோ வேறு ஒருவருக்கு மாற்றினாலோ, அதில் 20 சதம் லாபத்தை நில உரிமையாளருக்குத் தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகளை அளித்திருக்கிறது.
 
இதற்கு தொழில்துறையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதும் தடுக்கப்படும் என்று அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.
 
இந்தப் பரிந்துரைகள் தொழில்மயமாக்கலை, குறிப்பாக உற்பத்தித்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷும், வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இந்த விவகாரம் அமைச்சரவையின் விவாதத்துக்கு வரும்போது அதைக் கடுமையாக எதிர்க்கப்போவதாக ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
 
நிலம் கையகப்படுத்துவதில் அரசின் பங்கு இருக்கக் கூடாது என்ற அளவுக்கு இன்னும் நம்நாடு வளர்ச்சியடையவில்லை என்றும் தனியார் நிறுவனங்கள் தனிப்பட்டவர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகின்றன என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

About