இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக வி.எஸ்.சம்பத் என்பவரை குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் நேற்று முன்தினம் நியமனம் செய்தார்.
இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த பெரிய செங்காடு கிராமம். இந்த கிராமத்தில் ஆரம்பப் பள்ளி படிப்பை முடித்தவுடன், வாலாஜாவிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்தார்.
பின்னர் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் பியூசி மற்றும் பி.ஏ. (ஆங்கிலம்) பட்டப்படிப்பு முடித்தார். சென்னை மாநில கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் தேர்ச்சி பெற்று, வருமான வரித்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றினார்.
இதற்கிடையே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவுடன். முதன் முறையாக சித்தூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். பின்னர் பல்வேறு உயர் பதவிகளை வகித்தார். 2010 லிருந்து இந்திய தேர்தல் ஆணையாளராக பணியாற்றினார்.
தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கிரிஜா என்கிற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் நியமிக்கப்பட்டதை அறிந்த செங்காடு கிராம மக்களும் வாலாஜா அரசு பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியடைந்தனர்.




