காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்டவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காலை பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அக்கடிதத்தில், கர்நாடகம் காவிரி நீரைத் தவறாகக் கையாள்கிறது. தமிழகத்தின் நீரையும் சேர்த்து நான்கு அணைகளில் சேமித்துக் கொள்கிறது. கர்நாடகம் தனது கோடை காலத் தேவைக்காக கடந்த பிப்ரவரி மாதம் 58.50 டி.எம்.சி. நீரையும் மே மாதம் 28.176 டி.எம்.சி, நீரைத் தனது நான்கு அணைகளின் மூலம் சேகரித்து வைத்துள்ளது.
தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரையும் சேர்த்து எடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடியும் சம்பா சாகுபடியும் பெருமளவு பாதித்துள்ளது. இந்தச் செயலைக் கண்டிக்கவும் தமிழகத்துக்குத் தரப்பட வேண்டிய நீரைப் பெற்றுத் தரவும் காவிரி நடுவர் மன்றக் கூட்டத்தை பிரதமர் கூட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை இதுகுறித்து கூறியதாவது;
கடந்த 4 ஆண்டுகளில் கர்நாடகம் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் வழங்கி இருக்கிறது. மத்திய நீர்வள கமிஷனின் நீர் அளவை கணக்கிடும் நிலையமும் இதை உறுதி செய்து இருக்கிறது. எனவே காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டவேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
