ஓபலாபுரம் கனிமச் சுரங்க முறைகேட்டில், சுரங்கத் தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்குவதற்காக, முதல் கூடுதல் சிபிஐ நீதிபதி பட்டாபி ராமாராவ் ரூ.10 கோடி லஞ்சம் வாங்கினார் என்பதில் அனைவரும் அதிர்ச்சி அடையக் காரணம், நீதிபதி லஞ்சம் வாங்கினார் என்பதால் மட்டும் அல்ல; ஜாமீன் வழங்க ரூ.10 கோடியா என்பதுதான்.2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட கொஞ்சம் நஞ்ச நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் சமீபத்திய சில நீதிமன்றத் தீர்ப்புகளும், நீதிபதிகள் பற்றிய குற்றச்சாட்டுகளும் அமைந்துள்ளன என்பதுதான் வேதனையானது.எல்லாத் துறைகளிலும் இருப்பதைப்போல சில கறுப்பு ஆடுகள் நீதித்துறையிலும் இருப்பது என்பதில் வியப்பொன்றும் இல்லை. நீதிமன்றங்களில் இடைக்காலத் தடை பெறும் விவகாரங்களில் முறைகேடுகள் மேலதிகமாக நடப்பதாக எல்லோராலும் பேசப்பட்டு வந்தது. இடைக்காலத் தடை அளவுக்கு ஜாமீன் வழங்குவதில் முறைகேடு பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் பொதுவான கருத்தாக இருந்தது. அதுவும் இப்போது தகர்ந்துவிட்டது. தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி பட்டாபி ராமாராவ், இந்த வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீலட்சுமிக்கு ஜாமீன் மறுத்தபோதுதான் நீதியின் பாரபட்சம் அப்பட்டமாகத் தெரிந்தது. சிக்கிக்கொண்டுவிட்டார்.சமூகத்தில் பணம் வைத்திருப்போர், அதிகாரத்தில் இருப்போரின் துணையோடு சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக வளைத்துவிடும் முயற்சிகள்தான் இத்தகைய ஊழலுக்கு ஊற்றுக்கண். ஜனார்த்தன ரெட்டியிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருக்கிறது. ஆகவே, அவர் அவரது உயரத்துக்கு ஏற்பப் பேரம் பேசுகிறார் என்றுதான் இந்தச் சம்பவத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஜனார்த்தன ரெட்டி ஜாமீனில் வருவது மட்டுமல்ல, இந்த வழக்கையே பிசுபிசுத்துப் போகச் செய்வதற்கு ரூ. 60 கோடி திட்டம் தீட்டப்பட்டதாகச் செய்திகள் வெளியாவதைப் பார்க்கும்போது, பணம் பாதாளம்வரை பாயும் என்பது நிஜம்தான் போலிருக்கிறது.நீதித்துறை இந்த அளவுக்கு மோசமாகப் போனதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு மிக மோசமாக இருப்பது முதல் காரணம். அரசியல்வாதிகளால் பட்டியலிடப்படுவோர்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள். ஜாதியக் கட்சிகளின் தோற்றமும், கூட்டணி நிர்பந்தங்களும், அரசியல்வாதிகளின் அளவுக்கதிகமான பேராசையும் நீதித்துறையின் நேர்மையான நியமனங்களிலும், பதவி உயர்வுகளிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை வெளியில் சொல்லாவிட்டாலும் ஒவ்வொரு வழக்குரைஞரின் மனசாட்சியும் ஆமோதிக்கும்.ஐஏஎஸ், ஐபிஎஸ் போல நீதிபதிகளும் நீதித்துறை தேர்வாணையத்தால் நியமிக்கப்பட வேண்டும் என்பது இன்னும் கோரிக்கை அளவிலேயே இருக்கிறது. நீதிபதிகளையும் பொறுப்பேற்புக்கு ஆளாக்கும் சட்ட மசோதா இன்னமும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குக் கொண்டு வரப்படவில்லை
