சென்னை, ஜூன் 6: தமிழகத்தில் பி.இ.- பி.டெக். மற்றும் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க புதன்கிழமை (ஜூன் 6) கடைசி நாளாகும். இதுவரை 1.05 லட்சம் விண்ணப்பம்: அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் பி.இ.- பி.டெக். படிப்புகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 2.30 லட்சம் பேர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர். பி.இ.-பி.டெக். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் விண்ணப்பம் பொறியியல் மாணவர் சேர்க்கை குழுச் செயலருக்கு வந்து சேர புதன்கிழமை (ஜூன் மாலை 5.30 மணி என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.05 லட்சம் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர் என்று பொறியியல் மாணவர் சேர்க்கை குழுச் செயலர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். எம்.பி.பி.எஸ்.- 18 ஆயிரம் விண்ணப்பம்: எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்பில் சேர எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மொத்தம் 40,317 பேர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர். எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலருக்கு வந்து சேர புதன்கிழமை (ஜூன் 6) மாலை 5 மணி என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18 ஆயிரம் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி. சுகுமார் தெரிவித்தார்.