சென்னை,மே.27-
தமிழகத்தில் வழக்கத்தைவிட கோடை வெயில் முன்னதாகவே தொடங்கி மக்களை வாட்டி எடுத்தது. கடந்த 4-ந் தேதி முதல் கோடை வெயிலுடன் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் கைகோர்த்தது. இதனால், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்தவாறு இருந்தது.
கத்திரி வெயில் தொடக்கத்தில் வேலூர், திருச்சி மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரியாக இருந்தபோது, சென்னையில் வெயில் அளவு 96 முதல் 98 டிகிரி வரை இருந்தது. கடந்த வாரம் வரலாறு காணாத வகையில் சென்னையில் அதிகபட்சமாக வெயில் அளவு 112 டிகிரி வரை பதிவானது. இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவான வெயில் அளவைவிட மிக அதிகமாகும். அதன்பிறகும், சென்னையில் 104 டிகிரிக்கு குறையாமல் வெயில் இருந்து வருகிறது.
வெயிலுக்கு பயந்த பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தலையை துணியால் சுற்றியவாறு, கண்ணாடி அணிந்து சென்றனர்.
25 நாட்களாக மக்களை சொல்ல முடியாத அளவு வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் கத்தரி வெயில் நாளையுடன் (திங்கட்கிழமை) விடைபெறுகிறது. இந்த மாத இறுதியில் அல்லது ஜுன் மாத தொடக்கத்தில் பெய்ய உள்ள தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் எப்போது தொடங்கும் என்று பொதுமக்கள் காத்திருக்கின்றனர். அக்னி வெயிலுடன் கோடை வெயிலும் முடிவுக்கு வரும் என்றும், வார இறுதியில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மிதமான தட்பவெப்ப சூழல் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
’தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும். மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் பகல் நேரத்தில் வெப்பம் நிலவக்கூடும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மேகம் உருவாகும். அதிகபட்ச வெப்பநிலை 41 செல்சியசாக இருக்கும்’ என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
.jpg)