Showing posts with label ஒரு பெருமிதம்.. Show all posts

Tuesday, September 11, 2012

thumbnail

ஒரு பெருமிதம்.

எமெர்ஜென்ஸிக்குப் பிறகு பிறந்த தலைமுறை சூடு, சுரணையற்றது என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். சுயமரியாதை இயக்கத்தின் உரிமைப்போர், இந்திய சுதந்திரப் போர், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர், எமர்ஜென்ஸி அடக்குமுறைக்கு எதிரான போர் என்று தமிழக அளவில் நாம் கேள்விப்பட்ட சிவிலியன்கள் பங்குபெற்ற போராட்டங்களின் தீவிரம் கடந்த நாற்பதாண்டுகளாய் காணப்பட்டதாக நினைவேயில்லை. ஈழத்தமிழருக்கு ஆதரவான போக்கு எப்போதுமே பரவலாக இருந்ததாக நினைவில்லை. இடஒதுக்கீடு, ஊழலுக்கு எதிரான சிந்தனை போன்ற சமூகக்கோபங்களும் கூட மெஜாரிட்டியான மக்களின் உணர்வாக இல்லாமல் சிறு சிறு குழுக்களின் போராட்டங்களாகவே இருக்கிறது.

நான் பிறந்ததிலிருந்து முதன்முறையாக மாபெரும் மக்கள் பங்கேற்புடன் கூடிய போராட்டத்தை கூடங்குளம் விவகாரத்தில் காண்கிறேன். தங்கள் வாழ்வாதாரத்தை காக்க மக்கள் குடும்பம், குடும்பமாக தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடுவதை தமிழகத்தில் காண்பது இமாலய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதன் தாக்கம்தான் மேற்கு எல்லையோர தமிழகத்தை முல்லைப் பெரியாறுக்காக திரளவைத்தது.

போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் மீது எத்தனையோ கொச்சைப் பிரச்சாரங்கள் நடந்தது. அரசுடன், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இதற்கு துணைபோனார்கள். ஆனால் முழுக்க முழுக்க மக்களை மட்டுமே நம்பி, இன்று நாட்டை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள் கூடங்குளம் போராளிகள். அணு உலையை மூடவேண்டும் என்கிற அவர்களது நோக்கம் வெல்லாமல் போகலாம். ஆனால் தமிழனுக்கு போர்க்குணம் இன்னமும் மிச்சமிருக்கிறது என்பதை நிரூபித்த வகையில் மகத்தான வெற்றியை கண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இன்னுமோர் இடத்தில் அணுவுலை அமைக்க அரசு திட்டமிட்டால், ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை கூடங்குளம் மக்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். கூடங்குளம் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்.
நன்றி -யுவகிருஷ்ணா

(படம் உதவி : வினவு தளம்)

About