சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று 24ஆம் தேதி 32 மாவட்டங்களில் உள்ள மையங்களில் காவல்துறை பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது .
இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் ஏற்பட்டுள்ள 13,320 காலிப்பணி இடங்களை நிரப்ப நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு, வருகிற 24ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடைபெறும். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உள்ள மையங்களில் இந்த எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த எழுத்து தேர்வு எழுதுவதற்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 425 ஆண் விண்ணப்பதாரர்களும், 32 ஆயிரத்து 390 பெண் விண்ணப்பதாரர்களும் தகுதி பெற்றுள்ளனர்.
எழுத்து தேர்விற்கான அனுமதி சான்றிதழ் தகுதி உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சீருடைப்பணியாளர் தேர்வாணைய குழுமத்தின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தகுதியான சான்றிதழ்கள், நகல்களை இணைக்காத மற்றும் குறைபாடுகளுடைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், தங்களுக்கான எழுத்து தேர்வு அனுமதி சான்றிதழ், எழுத்து தேர்வு நடப்பதற்கு 5 நாட்கள் முன்பு வரையில் கிடைக்கப்பெறாவிட்டால், அதுபற்றி கவலைப்படத் தேவைஇல்லை. தேர்வாணைய இணையதள முகவரியில் அனுமதி சான்றிதழின் நகலை பிரிண்ட் எடுத்து, அதில் விண்ணப்பதாரரின் புகைப்படத்தை ஒட்டி, `ஏ' அல்லது `பி' பிரிவு அரசு அலுவலரின் சான்றொப்பம் பெற்று, மேலும் விண்ணப்பபடிவ எண், விண்ணப்பத்தை அனுப்பியதற்கான ஆதாரங்களை எழுத்து தேர்வு மய்ய கண்காணிப்பாளரிடம் காண்பித்து, எழுத்து தேர்வை எழுதலாம். - இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
