விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இன்ஜினியரிங் சீட்: மன்னர் ஜவகர் பேட்டி
May 2012
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இன்ஜினியரிங் சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் கடந்த 11ம் தேதி தொடங்கியது. சென்னை அண்ணா பல்கலை, குரோம்பேட்டை எம்ஐடி உள்பட 59 இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புதிதாக விண்ணப்பம் அச்சடிப்பது மற்றும் பிளஸ்2 தேர்வு ரிசல்ட்டை கருத்தில் கொண்டு கடந்த 3 நாட்களாக விண்ணப்ப வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. 3 நாட்களுக்கு பிறகு, வினியோகம் இன்று தொடங்கியது. விண்ணப்ப கவுன்டர்களை சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் பார்வையிட்டு, மாணவர்களிடம் பிரச்னைகள், குறைகளை கேட்டறிந்தார்.
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: பொறியியல் சேர்க்கை கவுன்சலிங்குக்காக முதல்கட்டமாக 2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. விண்ணப்பங்கள் அனைத்தும் விற்று தீர்ந்த நிலையில் மேலும், 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களுக்கான 2ம் கட்ட வினியோகம் இன்று தொடங்கியுள்ளது. வரும் 31ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஜூன் 6ம் தேதி கடைசி. இறுதி தேதி நீட்டிக்கப்படாது. தமிழகத்தில் தற்போது 2.20 லட்சம் இன்ஜினியரிங் சீட்கள் உள்ளன. இதில் 1.60 லட்சம் இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும். மேலும், இந்த ஆண்டு கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இன்ஜினியரிங் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது..
