சென்னை, ஆக. 31: சென்னை, மதுரை, கோவை உள்பட தமிழகத்தில் உள்ள 53 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு முதல் கட்டமாக நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு குழு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.நடப்பு ஆண்டுக்கான (2012-13) இந்தக் கட்டண விவரங்கள் தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.இந்தப் பள்ளிகளுக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரை ஆண்டு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சேலத்தில் உள்ள "செவராய்ஸ் வேலி' பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரமும், கோபாலபுரத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்புக்கு அதிகபட்சமாக ரூ.31,875-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதேபோல், பிளஸ் 2 வகுப்புக்கு விழுப்புரம் மாவட்டம், புதுவை ஆரோவில்லில் உள்ள நியூ எரா பள்ளிக்கு குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.7 ஆயிரமும், கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி சீனியர் செகண்டரி பள்ளிக்கு அதிகபட்சமாக ரூ.36 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மாதம் ரூ.50 கட்டணம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் உள்ள நியூ கிரியேஷன் பைலிங்குவல் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாதம் ரூ.50 மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று குழு உத்தரவிட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் சென்னையிலுள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இயங்கி வருகிறது.இந்தக் குழு முன்னிலையில் விவரங்களை சமர்ப்பிக்காததால் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படாமல் இருந்தது.இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் தமிழக அரசின் கட்டண நிர்ணய சட்டம் பொருந்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.இதையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், கோவை, மதுரை, நாமக்கல், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், சேலம், திருவாரூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 53 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இதில் சென்னையில் அதிக அளவாக 21 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும், காஞ்சிபுரத்தில் 11 பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள பள்ளிகளுக்கு...: மீதமுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த 384 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் பணியில் நீதிபதி சிங்காரவேலு குழு ஈடுபட்டு வருகிறது.இந்தப் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் விரைவில் அறிவிக்கப்படும் என்று குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments