காவிரியில் தினசரி 2 டிஎம்சி வீதம், 24 நாட்களுக்குத்
தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில்
தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை துவங்கும் வரை,
தமிழகத்துக்குத் தண்ணீர் தேவை என்று கூறியுள்ள தமிழக அரசு, காவிரி நடுவர்
மன்றத்தின் இடைக்கால உத்தரவின்படியும், வறட்சி நிலவும் பற்றாக்குறை
காலங்களில் தண்ணீரை பகிர்ந்துகொள்வது தொடர்பாக 2009-ம் ஆண்டு காவிரி
கண்காணிப்பு குழு எடுத்த முடிவின்படியும், கர்நாடகம் தண்ணீரைத் திறந்துவிட
வேண்டும் என மனுவில் கோரியுள்ளது.காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை என்று கூறிய தமிழக அரசு, அதுகுறித்து முடிவெடுக்க, காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். அக் கோரிக்கை ஏற்கப்படாததால், பிரதமருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 19-ம் தேதி டெல்லியில் பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெற்றது.
அதில், தினசரி 2 டிஎம்சி வீதம் 24 நாட்களுக்கு தண்ணீர் விட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால், கர்நாடகம் மறுத்தது. அதையடுத்து, செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை தினசரி 9 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட, ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். ஆனால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என்று கூறிய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், அந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெளிநடப்புச் செய்தார்.
அதன்படி, தமிழக அரசு செவ்வாய்க்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. கடந்த முறை விசாரணை நடைபெற்றபோது, காவிரி ஆணையக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படாவிட்டாலோ, கூட்டம் நடைபெறாவிட்டாலோ சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
அதை தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள தமிழகம், பற்றாக்குறை காலங்களில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பாக 2009-ம் ஆண்டு காவிரி கண்காணிப்புக் குழு உருவாக்கியுள்ள வழிகாட்டு முறைகளை அமல்படுத்த கர்நாடக மாநிலத்துக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments