அரசு தொழிற்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை 2012-13 கல்வியாண்டு முதல் வருமான உச்சவரம்பு மற்றும் இன வேறுபாடு இன்றி அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீராக 500 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 140 ரூபாயும், ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 150 ரூபாயும் பழங்குடியின மற்றும் பர்மா, இலங்கை, வியட்நாம் நாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு 175 ரூபாயும் பெற்றோரின் ஆண்டு உச்சவரம்பு 50 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 100 ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது அதை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, அதற்காக கூடுதலாக 12 கோடியே 94 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 3 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் 3 ஆயிரத்து 476 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments