வரலாறு படைத்தார் மேரி கோம் - உறுதியானது 4வது பதக்கம்!
ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை ஃப்ளை 51 கிலோ பிரிவின் அரையிறுதிக்கு இந்தியாவின் மேரி கோம் முன்னேறினார்.
இதன்மூலம் இந்தியாவுக்கு நான்காவது பதக்கம் உறுதியானது.
மேலும், கர்ணம் மல்லேஸ்வரி மற்றும் சாய்னா நேவாலுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றையும் படைத்துள்ளார், மேரி கோம்.
மேரி கோம் தனது காலிறுதிச் சுற்றில், துனீசியாவின் மரௌவா ராஹிலியை 15-6 என்ற கணக்கில் மிக அற்புதமாக வீழ்த்தினார்.
ரஹாலி, தரவரிசை அடிப்படையில் முதல் சுற்றில் விளையாடாமலேயே நேரடியாக காலிறுதிக்கு தகுதிபெற்றவர் என்பதும், மகளிர் குத்துச்சண்டையில் பலம் பொருந்தியவராகக் கருதப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குத்துச்சண்டையைப் பொறுத்தவரையில், அரையிறுதிக்கு முன்னேறினாலே வெண்கலப் பதக்கம் உறுதி.
மகளிர் குத்துச்சண்டை போட்டி முதல் முறையாக லண்டன் ஒலிம்பிக்கில்தான் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 51 கிலோ ஃபிளை வெயிட், 60 கிலோ லைட் வெயிட், 75 கிலோ மிடில் வெயிட் ஆகிய எடைப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் கலந்துகொள்ள தகுதி பெற்றதன் மூலம் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனால் மேரி கோம்.
மேரி கோம் இதுவரை 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியுள்ளார். ஆசிய அளவிலான போட்டிகளில் பல முறையும் வெற்றி கண்டுள்ளார். 29 வயது மேரி கோம் இரு குழந்தைகளுக்கு தாய்.
மிகுந்த அனுபவம் வாய்ந்த வீராங்கனையான மேரி கோம் கடந்த 12 ஆண்டுகளாக குத்துச்சண்டையில் கொடிகட்டிப் பறப்பவர். முன்னதாக 48 கிலோ ஃபிளைவெயிட் பிரிவில் பங்கேற்று வந்தாலும், லண்டன் ஒலிம்பிக்கில் 51 கிலோ ஃபிளை வெயிட் பிரிவில் பங்கேற்றுள்ளார்.
வாழ்த்துகள் மேரி கோம்!
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments