தமிழகத்தில் 80 புதிய விளையாட்டு பயிற்றுநர்களை நியமிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர், நாமக்கல்லில் சர்வதேச தரத்திலான நீச்சல் குளம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக் குறிப்பில், தமிழக விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கு கொள்ளும் வகையில் பயிற்சி அளிப்பதற்கு புதிதாக 80 விளையாட்டு பயிற்றுநர் பதவியிடங்களை தோற்றுவிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்றுநர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் எட்டாயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 76 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவாகும். கோவை நேரு விளையாட்டரங்கில், பகலிரவு போட்டிகள் நடத்துவதற்கு ஏதுவாக, ஒரு கோடியே 56 லட்ச ரூபாய் செலவில் 4 உயர்மட்ட கோபுர மின்னொளிக் கம்பங்கள் அமைக்கவும், 2 புதிய ஜெனரேட்டர்கள் பொருத்தவும் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
மேலும், நாமக்கல் மற்றும் திருவள்ளூரில் சர்வதேச தரத்திலான நீச்சல் குளம் அமைக்க தலா ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments