ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இரண்டு வாரத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.இது தொடர்பாக தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகர் தாக்கல் செய்த மனு:இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து பணி நியமனத்துக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2004-ல் பதிவு செய்துள்ளேன். பணி நியமனத்தில் மாநிலப் பதிவு மூப்பை கணக்கில் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010-ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்ட விதிகள் வகுக்கப்பட்டன. ஆசிரியர்களுக்கான தகுதிகளை நிர்ணயம் செய்ய தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பணி நியமனத்துக்கான தகுதி வரையறை செய்யப்பட்டு, 2011 நவம்பர் 15-ல் அரசு ஆணை எண் 181 வெளியிடப்பட்டது. அதன்படி பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையிலும், இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக மாநிலப் பதிவு மூப்பு அடிப்படையிலும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மார்ச் 7-ல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதித் தேர்வு எழுத வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆணை 181-க்கு முரணானது. இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் அறிவிப்புக்கு இரண்டு வாரம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த மனுவுக்கு தலைவரும், பள்ளிக் கல்வித் துறை செயலரும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனு மீதான விசாரணை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments