நேற்று வரை ஈ ஓட்டிக் கொண்டிருந்த "பங்க்'குகள் கூட, போலீஸ் பாதுகாப்போடு, பெட்ரோல் வினியோகம் செய்யும் நேரம் வந்துவிட்டது. பாரபட்சமில்லாமல், எல்லா "பங்க்'குகளிலும், சாலை வரை வரிசை நீள்கிறது.
போலீஸ்கா(ர)ர்கள், தலைக்கு மேல் சிவப்பு விளக்கு சுழல்பவர்கள், வரிசையை மீறி எரிபொருள் நிரப்பிக்கொள்ள முடிகிறது. சாமானியர்கள் என்ன செய்வது? இருக்கிற பெட்ரோலை மிச்சப்படுத்தலாம்.
எரிபொருளை மிச்சப்படுத்துவதால் என்ன பலன்? மிச்சமான எரிபொருளை மட்டும் வைத்து, சென்னையிலிருந்து மதுரை வரை சென்றுவிட முடியாது தான். அதேசமயம், கூட்டம் அதிகமிருக்கும் "பங்க்'கைத் தவிர்த்து, அடுத்த "பங்க்' வரையாவது செல்ல முடியும். இல்லாவிட்டால், எந்த வண்டியாக இருந்தாலும், தள்ளு வண்டியாக மாறிவிடும்.
எரிபொருள் சிக்கனத்துக்கான சில எளிய வழிகள் இதோ:
* முதலில், வாகனத்தை, "சர்வீஸ்' செய்யுங்கள். எண்ணெய் கசிவு நீக்குங்கள். "மைலேஜ்' பரிசோதனை செய்யுங்கள்.
* சிக்னலில் 30 வினாடிக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால், வண்டியை அணைத்துவிடுங்கள்.
* தேவைப்படும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில், "பிரேக்' பிடிக்காதீர்கள்.
* எந்நேரமும், "கிளட்ச்'சில் கால் / கை வைக்காதீர்கள்.
* குறிப்பிட்ட வேகத்துக்கு எந்த, "கியரோ' அந்த வேகத்தில் அந்த, "கியரை' பயன்படுத்துங்கள்.
* இரு சக்கர வாகனங்களை சாய்வாக நிறுத்தாதீர்கள்.
* எந்தப் பயணம் மேற்கொள்ளும் முன்பும், இது தேவை தானா என ஒரு முறை சிந்தியுங்கள். முடிந்தால், தொலைபேசியிலேயே வேலையை முடிக்கப் பாருங்கள்.
* குழுவாகச் செல்லும்போது மட்டும் படகு கார்களைப் பயன்படுத்துங்கள்.
* தனியாகச் செல்ல நேர்ந்தால், இரு சக்கர வாகனங்கள் உத்தமம்.
* எவ்வளவு முடியுமோ அவ்வளவு, பஸ், ரயில், ஷேர் ஆட்டோ போன்ற பொது வாகனங்களைப் பயன்படுத்துங்கள்.* ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரங்களுக்கு, நடந்தே செல்லப் பழகுங்கள். நடக்க நடக்க, "ஆயில்' குறையும்; ஆயுள் கூடும்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments